ரவிக்குமார் எம்.பி governor power and rajamannar committee
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்திருக்கும் பிரச்சினையில் இன்று (பிப்ரவரி 6) உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்திருத்தம்!
ஆளுநரின் அடாவடியான போக்கு மாநில உரிமைகள் தொடர்பான விவாதத்தை இந்திய அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதே நாளில் யுஜிசி வெளியிட்டிருக்கும் வரைவு விதிகளை எதிர்த்து திமுக ஒருங்கிணைத்துள்ள ஆர்ப்பாட்டமும் டெல்லியில் நடக்கிறது.
இவை இரண்டும் மாநில உரிமைகள் தொடர்பான விவாதத்தைத் தூண்டியுள்ளன. கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பி.வி.ராஜமன்னார் (1901–1979) குழு கூறிய பரிந்துரைகளை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வதும் விவாதிப்பதும் அவசியம். governor power and rajamannar committee

தமிழ்நாடு அரசால் மத்திய மாநில உறவுகளைப் பற்றி ஆராய்வதற்காக 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு 1971 மே மாதத்தில் தனது அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. governor power and rajamannar committee
அந்த அறிக்கையில் அரசமைப்புச் சட்டத்திருத்தம் என்ற ஒரு அத்தியாயம் இடம்பெற்றுள்ளது (அத்தியாயம் XX ). அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மாநிலங்களின் ஒப்புதல் கட்டாயம் என ஆக்கப்பட வேண்டும் என்பதை ராஜமன்னார் குழு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால்தான் அரசமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும். அதுபோன்ற ஒரு ஏற்பாடு தற்போது அவசியம். இல்லாவிட்டால் ஒரு மாநிலத்திற்கு ஊறு விளைவிக்கின்ற சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி விட முடியும் என்று அப்போதே சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.
மாநிலத்துக்கு ஊறு செய்யும் சட்டம்!
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளும் எந்த ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கும் நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் அல்லது மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என ராஜமன்னார் குழு வலியுறுத்தியுள்ளது.
நான்கில் மூன்று பங்கு மாநிலங்களின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்ற பாதுகாப்புக் கூறும்கூட நீட் தேர்வு போன்ற பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியாது. ஏனெனில் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலமும் அதன் ஆபத்தை உணரவும் இல்லை, எதிர்க்கவுமில்லை. எனவேதான், ஒத்திசைவுப் பட்டியலில் ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை இயற்றினால் அதில் திருத்தம் கொண்டு வரவும், அதை ரத்து செய்யவும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று ராஜமன்னார் குழு கூறியிருக்கிறது.

குறிப்பாக உறுப்பு 252 இன் கீழ் நாடாளுமன்றம் நிறைவேற்றும் ஒரு சட்டத்தைத் திருத்தவோ, ரத்துசெய்யவோ மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என ராஜமன்னார் குழு பரிந்துரைத்துள்ளது. அவ்வாறு இருந்தால்தான் ஒரு மாநிலத்துக்கு ஊறு செய்யும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற முடியாது. governor power rajamannar committee
கல்வி குறித்த அதிகாரம் மாநிலப் பட்டியலில்தான் இருந்தது என்பதும் அவசரநிலைக் காலத்தின் போதுதான் அது ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பதும் நமக்கெல்லாம் தெரியும். இந்த அதிகாரத்தை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் எனத் தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமே குரல் கொடுத்து வருகிறது.
மாநில அரசுக்கு அதிகாரம்! governor power and rajamannar committee
இதற்கான ஆதரவை நாம் திரட்ட வேண்டும். ராஜமன்னார் குழு ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள பல பிரிவுகளை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும், ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரம் தொடர்பான மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்வதற்கு முன்பு மாநிலங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறது.
மாநிலங்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட சில அதிகாரங்களை அளித்து செயல்படுத்தப் பணிக்கும் விதமாக சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரமளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 154, 258 ஆகியவை நீக்கப்படவேண்டும்.அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இதர அதிகாரங்கள் ( Residuary Powers ) யாவும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.

மாநிலங்களுக்குச் சிலவற்றைச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்க அதிகாரமளிக்கும் பிரிவுகள் 256, 257, 339(2), 344 (6) ஆகியவை நீக்கப்படவேண்டும். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளவை தொடர்பாக மாநில அரசு இயற்றும் சட்டமே செல்லுபடியாகும் என ஆக்கப்படவேண்டும்.
அதற்கேற்ப பிரிவு 254 திருத்தப்படவேண்டும். மாநில அரசு அவசர சட்டம் இயற்றுவதற்கு முன்பு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறவேண்டும் என்ற பிரிவு 213 (1) நீக்கப்படவேண்டும். மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வகை செய்யும் பிரிவு 249 நீக்கப்படவேண்டும்.
சட்ட மேலவையை உருவாக்கவும், கலைக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற சட்டப் பிரிவு 169 திருத்தப்படவேண்டும். மாநிலங்களில் மத்திய படைகளை ஈடுபடுத்த வகைசெய்யும் பிரிவு 257 ஏ நீக்கப்படவேண்டும் “ என ராஜமன்னார் குழு பரிந்துரைத்துள்ளது.
கூட்டாட்சி குறித்த விழிப்புணர்வு!
பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிகளை எதிர்த்து டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும் அதில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதும் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும். அத்துடன் நிறுத்திவிடாமல், ராஜமன்னார் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளைப் பற்றிய விவாதத்தை டெல்லியில் நடத்துவதற்கு திமுக முன்வரவேண்டும்.

தற்போது எழுந்துள்ள சிக்கல் திமுகவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான முரண்பாடு என்பதுபோல சுருக்கிக் காட்டுவதற்கு பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் முற்படுகின்றனர். அந்தச் சதியை முறியடிக்க வேண்டுமெனில் அது மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான சிக்கல்தான் என நாம் சரியான கோணத்தில் மக்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கும் வழக்கு கூட்டாட்சி குறித்த விழிப்புணர்வைத் தூண்டியிருக்கிறது. அதை அரசியல் செயல் திட்டமாக விரிவுபடுத்துவதற்கு மத்திய மாநில உறவுகள் குறித்த ராஜமன்னார் குழு அறிக்கையை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். சர்க்காரியா ஆணையம், பூஞ்ச்சி ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளையும்கூட அத்துடன் சேர்த்து விவாதிக்கலாம். gov
கட்டுரையாளர் குறிப்பு: governor power and rajamannar committee

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். governor power and rajamannar committee