மேற்கு வங்கத்தில் உள்ள மகர்ஹாத் பாசிம் மற்றும் டைமண்ட் ஹார்பர் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை (மே 2) மறுத்தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு இரு மாநில மக்களும் காத்திருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலின் போது, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிதைக்கப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மகர்ஹாத் பாசிம் மற்றும் டைமண்ட் ஹார்பர் ஆகிய தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மகர்ஹாத் பாசிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்தமுறை பாஜக கூட்டணி மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று மம்தா பேனர்ஜி கருத்து கணிப்பை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
