தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் மீது பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்கலாம் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விடுத்துள்ள அறிக்கை:
டி.சி. இளங்கோவன் செயலாளர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Associations of Private Schools in Tamil Nadu) என்பவர் அளித்த புகாரின் பெயரில் பதிவு செய்யப்படாத கூட்டமைப்புகளின் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் சிலர், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, கட்டிட அனுமதி, RTE தொடர்பான அனுமதிகள் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி, அவர்களிடம் சுமார் ரூ100 கோடியளவில் பணம் வசூலித்து, வாக்குறுதியளித்தபடி அரசு அனுமதிகளை பெறுத்தராமலும் பெற்ற பணத்தை திருப்பி வழங்காமலும் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டு மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முழுமையான விவரங்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.டி. அரசகுமார் என்ற புதுக்கோட்டை தியாகராஜன் அரசகுமார் என்பவர் ஜூன் 27-ந் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
