தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் ரூ100 கோடி மோசடி செய்ததாக தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ100 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்தார் பிடி அரசகுமார் என்பது புகார். தனியார் பள்ளிகள் கூட்டமைப்புச் செயலாளர் இளங்கோவன் இந்தப் புகாரை கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு பெறாத சங்கத்தை பிடி அரசகுமார் நடத்தி வந்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருதல், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல் உள்ளிட்டவைகளின் பேரில் தனியார் பள்ளிகளிடம் ரூ100 கோடியை பி.டி. அரசகுமார் வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய பி.டி.அரசகுமாரின் கூட்டாளி முத்துக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
