சர்க்கரைத் துறையை மீட்டெடுக்கும் மற்றும் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலான புதிய கொள்கையின் ஒரு பகுதியாக, முதலீட்டாளர்களுக்கு வெறும் 1 ரூபாய் என்ற அடையாள குத்தகைத் தொகையில் அரசு நிலத்தை வழங்கும் முக்கிய ஊக்கத்தொகைத் திட்டத்தை பீகார் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பீகார் மாநில அரசு ‘கரும்புத் தொழில்கள் முதலீட்டு ஊக்கக் கொள்கை 2026’-ஐத் தொடங்கியுள்ளது.
இந்த கொள்கையின் மூலம், புதிய சர்க்கரை ஆலைகளை நிறுவும் முதலீட்டாளர்கள், 40 ஏக்கர் வரையிலான அரசு நிலத்தை 30 ஆண்டு கால குத்தகைக்கு வெறும் 1 ரூபாய்க்குப் பெற முடியும். சலுகை விலையிலான நிலச் சலுகை தவிர, சர்க்கரை ஆலைத் திட்டங்களுக்காக முதலீட்டாளர்கள் வாங்கும் நிலத்திற்கான பதிவு மற்றும் முத்திரை வரிச் செலவுகளை 100 சதவீதம் திரும்ப வழங்கும் வசதியையும் இக்கொள்கை வழங்குகிறது.
புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, நாளொன்றுக்கு 5,000 டன் கரும்பு அரவை திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.100 கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 3,500 டன் அரவை திறன் கொண்ட புதிய ஆலைகள் ரூ.70 கோடி வரை நிதியுதவி பெற தகுதி பெறும்.
இக்கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் ‘நவீன சர்க்கரை வளாகம்’ என்ற கருத்தாக்கமாகும். இதன் கீழ் சர்க்கரை உற்பத்தி, எத்தனால் தயாரிப்பு, மின் உற்பத்தி மற்றும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக செயல்படும்.
மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை மீட்டெடுக்கவும், மாநிலம் முழுவதும் 25 புதிய சர்க்கரை ஆலைகளை நிறுவவும் பீகார் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
இக்கொள்கையை அறிவித்த சர்க்கரை ஆலைகள் துறை அமைச்சர் சஞ்சய் குமார், ”சர்க்கரைத் துறைக்காக இத்தகைய விரிவான ஊக்கத்தொகை கட்டமைப்பை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக பீகார் உருவெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
