ஜனநாயகன் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமைச்சருக்கு இணையான பதவியாகும்.

ஆளுநரின் உத்தரவுப்படி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ”புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கான ‘சிறப்புப் பிரதிநிதி’ என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இப்பணியிடம், நியமிக்கப்படுபவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கோ அல்லது இப்பணியிடத்தின் தேவை முடிவுக்கு வரும் வரையோ — இவ்விரண்டில் எது முந்தையதோ அதுவரை — செயல்பாட்டில் இருக்கும். வெங்கட நாராயணா இந்த  பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.  வெங்கட நாராயணா நியமனம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

யார் இந்த வெங்கட நாராயணா?

முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் தான் இந்த வெங்கட நாராயணா. இவரது தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. டாக்சிக் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. கல்கி, அனிமல், சீதா ராமம், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களை கன்னட திரையரங்குகளுக்கு விநியோகமும் செய்திருக்கிறது.

ADVERTISEMENT

கேவிஎன் தயாரித்த 5ஆவது படம் தான் விஜய்யின் ஜனநாயகன். ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கி தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதனால் கேவிஎன் புரொடக்‌ஷன் நஷ்டத்தை சந்தித்தது.

இந்தசூழலில் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக தேர்தலில் வெற்றி பெற்றதும் பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி, ஆளுநரை சந்தித்த போதும் வெங்கட நாராயணாவை விஜய் உடன் அழைத்துச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share