தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதற்கான டெண்டரை ரத்து செய்து விஜய் தலைமையிலான தவெக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய 12 மாநகராட்சிகளில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வது குறித்து அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரித்து, ஆலோசனை வழங்கத் தனியாரைத் தேர்வு செய்யக் கடந்த 20-ஆம் தேதி தமிழக அரசின் திட்ட மேம்பாட்டு நிதி நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டு விளம்பரம் வெளியிடப்பட்டது.
தேர்தலுக்கு முன் திமுக அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகத் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராகப் பேசியிருந்தது.தற்போது அதே தனியார் மயமாகக்கும் முயற்சியில் இறங்குவது ஏன் என்ற விமர்சனம் எழுந்தது.
அரசின் இந்த முடிவுக்கு, தவெகவின் கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்தன. மேலும், தூய்மைப் பணியாளர்களும் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர்.
கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த விவகாரம் பெரிதான நிலையில், சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காகக் கோரப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது.
