தேமுதிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறோம். நிச்சயமாக அதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து உழைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆளும் தவெக மற்றும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனிடையே, தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தலைத் தனியாகச் சந்திக்க உள்ளதாக நேற்று அறிவித்தன. இதனால் தமிழக இடைத்தேர்தலில் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் பேசுகையில்: “மற்ற கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை எடுப்பதில் எனக்கு எந்த ஒரு கருத்தும் கிடையாது; ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறோம். நிச்சயமாக அதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்.
அன்று அண்ணன் ஸ்டாலின் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இடைத்தேர்தலில் பரந்தாமனையும் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவிக்க உள்ளோம், உங்களது ஆதரவு வேண்டும் என்று கேட்டார். தேமுதிக கண்டிப்பாகத் திமுகவுடன் தான் கூட்டணியில் இருக்கும், தேமுதிகவின் ஒத்துழைப்பு நூறு சதவீதம் இருக்கும் என்று அவரிடம் சொன்னேன். அதேபோல், எனது ஒப்புதலோடுதான் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேமுதிகவின் முழு ஆதரவும் திமுகவிற்கு இருக்கும் என்று தெரிவித்திருந்தேன்.
அதேபோல் தான் அவரவர் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் உழைக்கப் போகிறோம். தேர்தல் முடிவு என்பது மக்கள் கையில் தான் உள்ளது; ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.”என்றார்.
