கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்று மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (ஜனவரி 7) தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, “வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
2030-ஆம் ஆண்டு ஒரு மில்லியன் டாலர் அமெரிக்க பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தை நான் பாராட்டுகிறேன்.
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 லக்ராஞ்சன் புள்ளியில் நேற்று (ஜனவரி 6) நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நிகர் ஷாஜி என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி விஞ்ஞானிகள் அனைவரையும் முன்னின்று வழி நடத்துகிறார். விண்வெளி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.
2014-ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் வளர்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன்படி, புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால், பொருளாதாரத்தில் வளர்ச்சியடையலாம். கடந்த வாரம் தமிழகத்திற்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றி வருகிறது. 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்குகளை நான் திறந்து வைத்தபோது முதலில் தமிழகத்தில் தான் டெக்ஸ்டைல் பார்க்கை திறந்து வைத்தேன்.
தமிழகத்தின் நலன் குறித்து பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அதன்காரணமாக தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடி கலந்துகொள்ளும் எஸ்டிபிஐ மாநாடு: திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு!
கோத்ரேஜ் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு: ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!