முகத்தில் திடீரென தோன்றும் சிறிய பருக்கள் பலருக்கும் கவலையை ஏற்படுத்தும். குறிப்பாக இளமைப் பருவத்தில் இது அதிகமாகக் காணப்பட்டாலும், 20, 30 வயதைக் கடந்த பிறகும் பலருக்கு முகப்பரு பிரச்சினை தொடரலாம். பொதுவாக முகப்பரு (Acne) தோல் பிரச்சினையின் முக்கிய அறிகுறியாகும். தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அடைபடுதல், பாக்டீரியா பெருக்கம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் பருக்கள் உருவாகின்றன என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முகப்பரு வர முக்கிய காரணங்கள் என்ன?
தோலில் உள்ள செபேஷியஸ் (Sebaceous) சுரப்பிகள் அதிகமாக எண்ணெய் சுரப்பது, இறந்த சரும செல்கள் துளைகளை அடைப்பது மற்றும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பது ஆகியவை முகப்பரு உருவாக முக்கிய காரணங்களாகும். இதனுடன், ஹார்மோன் மாற்றங்கள், மனஅழுத்தம் மற்றும் சில மருந்துகளும் பருக்களை அதிகரிக்கலாம்.
பரு பொதுவாக முகம், மார்பு, முதுகு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். ஏனெனில், இந்த இடங்களில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக உள்ளன.
எல்லா பருக்களும் ஒரே மாதிரியானவை அல்ல
முகப்பருவில் பல வகைகள் உள்ளன. கரும்புள்ளி (Blackheads), வெண்புள்ளி (Whiteheads), சிவந்து வீங்கிய பருக்கள் (Papules), சீழ் நிறைந்த பருக்கள் (Pustules), ஆழமாக உருவாகும் முடிச்சு போன்ற பருக்கள் (Nodules) மற்றும் சிஸ்ட் (Cysts) ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
குறிப்பாக சிஸ்ட் மற்றும் ஆழமான பருக்கள் வலி ஏற்படுத்துவதோடு, சிகிச்சை பெறாமல் விட்டால் நிரந்தர தழும்புகளையும் ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
பருக்களை கிள்ளுவது ஏன் தவறு?
பருக்களை கைகளால் அழுத்தி உடைப்பது பலரின் பழக்கமாக உள்ளது. ஆனால் இது சருமத்துக்குள் இருக்கும் பாக்டீரியாக்களை மேலும் ஆழமாகச் செல்லச் செய்து, தொற்று மற்றும் புதிய பருக்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். அதோடு, முகத்தில் நிரந்தர தழும்புகளும் ஏற்படலாம்.
அதற்குப் பதிலாக, பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Peroxide), சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) அல்லது ரெட்டினாய்டுகள் (Retinoids) போன்ற மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தலாம். பருக்கள் நீண்ட நாட்கள் தொடர்ந்தாலோ, அதிக வலியுடனோ இருந்தால் தோல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
முகப்பருவை எப்படி கட்டுப்படுத்தலாம்?
முகத்தை தினமும் இரண்டு முறை மென்மையான கிளென்சரால் கழுவுவது, முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதைத் தவிர்ப்பது, மேக்கப்பை இரவு முழுவதும் வைத்திருக்காமல் அகற்றுவது மற்றும் முகத்துக்கு ஏற்ற ‘Non-comedogenic’ தோல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவும்.
முகப்பரு என்பது மிகவும் பொதுவான தோல் பிரச்சினையாக இருந்தாலும், சரியான பராமரிப்பும் ஆரம்பகட்ட சிகிச்சையும் இருந்தால் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று தோல் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
