வார இறுதியில் வீட்டில் வித்தியாசமான மட்டன் ரெசிபியை சமைக்க விரும்புபவர்களுக்கு மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவான காலா மட்டன் கறி (Kala Mutton Curry) சிறந்த தேர்வாக இருக்கும். இந்த உணவின் சிறப்பே அதன் புகை மணம் கலந்த காரமான சுவை தான். வெங்காயம், உலர் தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்களை நன்கு வறுத்து தயாரிக்கப்படும் இந்தக் குழம்பு, சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த பாரம்பரிய ரெசிபியை வீட்டிலேயே எப்படி எளிதாகச் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேரினேஷனுக்கு
- 500 கிராம் எலும்புடன் கூடிய மட்டன்
- 3 டேபிள்ஸ்பூன் தயிர்
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- கொத்தமல்லித்தழை
- மஞ்சள்தூள்
- உப்பு
- எண்ணெய்
மசாலாவுக்கு
- வெள்ளை எள்
- மல்லி விதை
- கிராம்பு
- இலவங்கப்பட்டை
- ஏலக்காய்
- மிளகு
- பிரியாணி இலை
- கசகசா
- உலர் தேங்காய்
- வெங்காயம்
ஆகியவற்றை நன்றாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வறுத்த மசாலாதான் காலா மட்டனின் தனித்துவமான நிறத்தையும் சுவையையும் தருகிறது.
மேரினேட் செய்து சமைப்பது எப்படி?
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை அரைத்து, அதனுடன் தயிர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மட்டனில் நன்றாக மேரினேட் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊற வைத்தால் மட்டன் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பின்னர், வறுத்து அரைத்த கருப்பு மசாலாவை தனியாகத் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி மேரினேட் செய்த மட்டனை சில நிமிடங்கள் வதக்கிய பிறகு, அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்றாக வேகும்வரை சமைத்தால் அடர்த்தியான காலா மட்டன் கிரேவி தயாராகிவிடும்.
சுவையின் ரகசியம் என்ன?
இந்த உணவின் மிகப்பெரிய சிறப்பு, வெங்காயம் மற்றும் உலர் தேங்காயை நன்கு கருகும் வரை வறுத்து பயன்படுத்துவதுதான். இதனால் குழம்பிற்கு இயற்கையாகவே கருமையான நிறமும், புகை மணமும் கிடைக்கிறது. தக்காளி சேர்க்காமல் தயாரிக்கப்படுவதும் இந்த ரெசிபியின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.
சூடான சாதம், நான், சப்பாத்தியுடன் பரிமாறினால் இந்த காலா மட்டன் கறியின் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். காரமான மட்டன் உணவுகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக ஒருமுறை முயற்சி செய்ய வேண்டிய ரெசிபி இது.
