பழனியில் (பழநி) ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ரமேஷுக்கு சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழநியில் நடைபெற்றிருக்கிற 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் திருடப்பட்டிருப்பது, தமிழ்நாடு முழுவதும் ஒரு பெரும் பேசுபொருளாக இன்றைக்கு மாறியிருக்கிறது. இந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், முறைகேடாக கைமாற்றப்பட்டிருப்பது தொடர்பாகப் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன.
இந்த நிலத்தைப் பத்திரப் பதிவு செய்வதற்காக, ஏற்கனவே இருந்த பத்திரப் பதிவு அதிகாரி லீவில் அனுப்பப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக, கொடைக்கானலிலிருந்து வந்த ஒரு அதிகாரி, அன்றைய தினமே பொறுப்பேற்று இந்தப் பத்திரப் பதிவைச் செய்து முடித்திருக்கிறார். ஒரே நாளில் வெள்ளைதுரை மற்றும் சேதுபதி ஆகிய இருவருக்கும் இந்தப் பத்திரப் பதிவு மாற்றப்பட்டிருக்கிறது.
பத்திரப் பதிவில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள செக் வழங்கியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் செக் உண்மையானதா? செக் கொடுத்தவர்களுடைய வங்கிக் கணக்கில் அந்த அளவு பணம் இருக்கிறதா? செக் கொடுத்தவர்கள் அந்தப் பணத்தைக் கொடுக்கும் அளவுக்குத் தகுதியானவர்களா? அந்தச் செக் கலெக்ஷனுக்குச் சென்றுள்ளதா? இதெல்லாம் யாருக்குமே தெரியவில்லை. எனவே, இது ஒரு போலி செக் கொடுக்கப்பட்டு நிலத்தைக் அபகரித்த மோசடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
எங்கேயோ இருக்கும் கொடைக்கானல் அதிகாரியை திடீரென அழைத்து வந்து பணியமர்த்தியதும், ஏற்கனவே இருந்த அதிகாரியைப் பொறுப்பிலிருந்து விடுவித்ததும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இது போன்ற மாற்றங்கள் எல்லாம் எப்படி நடக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “இது அறியாமல் நடந்த தவறு” என்று கூறியிருக்கிறார்.
- “அறியாமல்” எப்படி இவ்வளவு பெரிய தவறு நடக்க முடியும்?
- டியூட்டியில் இருந்த அதிகாரி எப்படி லீவில் சென்றார்?
- அந்த இடத்திற்குப் புதிய அதிகாரி வந்தது எப்படி?
- இந்த இரண்டு பேருக்குப் பணம் எங்கிருந்து வந்தது?
- அறியாமல் நடந்த தவறு என்றால், சிபிஐ விசாரணை ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இதில் அமைச்சருக்குச் சம்பந்தம் இருப்பதாக நாங்கள் கூறவில்லை, ஆனால் இந்த மர்மங்கள் பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய தமிழ்நாடு அரசு, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கையாகப் பத்திரப் பதிவை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இது தொடர்பாகத் தெளிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஏன் இந்தச் சார்பதிவாளரை இன்னும் கைது செய்யவில்லை? இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்பதுதான் எங்களது கேள்வி. இவ்வளவு பெரிய குற்றத்துல ஈடுபட்டவரை, ‘முன்ஜாமீன்’ல விட்டுவிட்டது உயர்நீதிமன்றம்.இந்த சார்பதிவாளர், பத்திரப் பதிவு அதிகாரி, இந்தக் குற்றத்துல ஈடுபட்டவங்க எல்லாம் ஏன் கைது செய்யப்படவில்லை?
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. எனவே, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
இந்த விசாரணையில் எங்களது கட்சியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தைக்கூட நாடத் தயங்க மாட்டோம்.
அதேபோல், ஏன் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் நடக்கிறது? அந்தச் சார்பதிவாளரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இவ்வளவு பெரிய குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்பதுதான் எங்களது கேள்வி.
எங்களை பொறுத்தவரையில் ஏதோ ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி இதோடு முடிந்துவிட்டது என்று நினைக்கவில்லை. தேவையானால் நீதிமன்றத்தை நாடி, முறையான விசாரணை நடக்கிறோம். குறிப்பாக, 1999-லிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற பெரிய புள்ளிகள் யார்? என்பதை கண்டறிய வேண்டும். தமிழக அரசு, இதில் கொஞ்சம் கூட ஊசலாட்டம் இல்லாமல் முறையான நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, இனிமேல் தமிழ்நாட்டில் இப்படி நடக்கக்கூடாது என்பதற்கான ஒரு பாடமாக இது அமைய வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பழநியில் சிபிஎம் போராட்டம்:





