திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “சட்டப்பேரவையில், ‘ரேஷன் அரிசி வாங்கி யாரும் சாப்பிடுவது இல்லை; எல்லோரும் ஆடு, மாடு, கோழிகளுக்குத்தான் போடுகிறார்கள்’ என்கிறார் ஒரு அமைச்சர். மற்றொரு அமைச்சர், ‘யாரும் அதை சோறாக ஆக்குவது இல்லை; இட்லி, தோசை செய்துதான் சாப்பிடுகிறார்கள்’ என்கிறார். ஏன், இட்லி, தோசையெல்லாம் உணவின் கணக்கில் வராதா?
இப்போது 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் அதை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தனித்து வாழும் ஏராளமான பெண்கள், முதியவர்களின் உயிரை ரேஷன் அரிசிதான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் அமைச்சர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை.
இல்லை என்றால், அமைச்சர்கள் எல்லோரும் ஓட்டு கேட்டுப் போவதுபோல், ‘ரேஷன் அரிசி யார் யார் வாங்குகின்றனர்? என்ன செய்கிறீர்கள்?’ என்று வீடு வீடாகக் கொஞ்சம் சென்று கேளுங்கள். கேட்டால், அவர்கள் சொல்வார்கள் – ‘ரேஷனில் கை வைத்தால் கதை முடிந்தது’ என்று! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
