பால் கொள்முதல் விலை ஏற்கனவே ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.3 அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 31) 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், பால் உற்பத்தி கிராம பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக ஒரு ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத்தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்து, மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தி 19.8.2026 அன்று சட்டமன்ற பேரவையில் அறிவித்தோம்.
இந்த சூழ்நிலையில், கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடு பொருட்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி தர வேண்டும் என்று பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், நல சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து நமது அரசு பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மேலும் 3 ரூபாய் உயர்த்தி 44 ரூபாயாக வழங்கவும் தற்போது அரசு முடிவு செய்துள்ளது.
நமது அரசு பால் உற்பத்தியாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும் பால் கொள்முதல் விலை உயர்வின் மூலம் ஏற்படும் செலவினத்தை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடுசெய்து வழங்கும்.
இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக மொத்தம் ஒரு மாதத்திற்கு 60 கோடியும், ஒரு ஆண்டிற்கு 720 கோடியும் செலவாகும்.” என தெரிவித்தார்.
