தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழ்நாட்டுக்கு ஒரு பாதிப்புமே இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா 2026, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகியவற்றின் மீது மக்களவையில் நேற்று ஏப்ரல் 16-ந் தேதி நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: இந்த மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, மக்களவையில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா 2026-ஆல், தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது, மாறாக அவற்றுக்கு நன்மை பயக்கும்.
மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்கள், 816 ஆக உயரும்; இது அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்குமான இடங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
மக்களவையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தற்போதுள்ள 129 இடங்கள், 195 ஆக உயரும். மக்களவையின் மொத்த இடங்களில் அவற்றின் பங்கு ஏறக்குறைய 24% ஆகவே இருக்கும்.
தமிழ்நாட்டின் பலம் குறையாது, மாறாக அதிகரிக்கும் என உறுதியளிக்கிறேன்.
- தற்போது, 543 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் சுமார் 7.18 சதவீதமான, 39 உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- இந்த இடங்களின் எண்ணிக்கை சுமார் 59 ஆக உயரும். மேலும் 816 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் சுமார் 7.23% ஆக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் சாதி குறித்த தரவுகளும் சேகரிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக வீடுகளும், அதைத் தொடர்ந்து தனிநபர்களின் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும். தற்போது முதல் கட்டம் நடைபெற்று வருகிறது, இதில் வீடுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதன் பிறகு தனிநபர்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் போது சாதி குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
