நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காகக் கடந்த மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் தேர்வுக்கு முன்பாகவே இணையதளத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், அது உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப் போனதாகவும் சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும், கடந்த ஜூன் 21ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, இத்தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 56.8 சதவீதம் பேர் மாணவிகள், 55.1 சதவீதம் பேர் மாணவர்கள் ஆவர்.
இத்தேர்வில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகியோர் 720க்கு 716 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும், 19 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும், 138 பேர் 690 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். இதில் 690க்கும் மேல் பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, 1,492 பேர் 650க்கு மேலும், 10,160 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 90,780 மாணவர்கள் பெற்றுள்ளனர். மாநில வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 1.7 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 43 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
