நீட் தேர்வு முறைகேடுகள், டெல்லி போராட்டங்களில் போலீஸ் அடக்குமுறைகளைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஜூலை 22-ந் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கறுப்பு உடை, கறுப்பு கொடிகளுடன் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். காக்ரோச் ஜனதா கட்சியினரின் ஜூலை 20-ந் தேதி நடத்தப்பட்ட நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியை போலீசார் கொடூரமாக ஒடுக்கினர்.
இதனையடுத்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடி இல்லம் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டத்துக்கு பின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்றும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கறுப்பு உடை அணிந்திருந்தனர். கறுப்பு கொடிகளையும் கையில் பிடித்திருந்தனர். விசிக தலைவர் திருமாவளவன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்
