நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தும் தொடர் போராட்டத்தில் 4-வது நாளாக பல்லாயிரக்கணக்கானோர் காலை முதலே திரண்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தருக்கு பிற மாநிலங்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் வருவதைத் தடுக்க 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், படேல் சவுக், ராமகிருஷ்ணா ஆஸ்ரம் மார்க், பாரகம்பா ரோடு, உச்சநீதிமன்றம், சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐ.டி.ஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக், சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிஷி, “டெல்லி மக்களின் அன்றாட பயணங்களை சீர்குலைக்கிறது மோடி அரசு” என குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தடியடி சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று எச்சரித்துள்ளார்.
மேலும் முற்றிலும் சேதமடைந்த கார் ஒன்றை ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு வெளியே டெல்லி காவல்துறை கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாகவும் காக்ரோச் ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த கார் ஏன் இங்கு கொண்டுவரப்பட்டது? காக்ரோச் போராட்டத்தால் வன்முறை ஏற்பட்டது என்பதை காட்டவா? எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
