டெல்லியில் (Delhi) நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காக்ரோச் ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே இன்று ஜூலை 22-ந் தேதி இரவு பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் பலரும் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணைய சேவை நாளை காலை 6 மணி வரை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நீட் மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் டெல்லி டால்ஸ்டாய் மார்க் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சில போராட்டக்காரர்கள் போலீசாரை வாள்களைக் கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் போலீசார் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோல சன்சாத் மார்க் பகுதியிலும் போலீசாருடன் மோதல் வெடித்தது. அங்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஜந்தர் மந்தர் பகுதியில் போலீசார் தடியடி நடத்தினர்.
இது தொடர்பாக டெல்லி போலீசார் கூறுகையில், “போராட்டக்காரர்கள் காக்ரோச் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்” என குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக இரவோடு இரவாக அப்புறப்படுத்தக் கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மும்பையில் போராட்டம்
மேலும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதரில் இன்று இரவு பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடினர். நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதில் மும்பை பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
