விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, கரூரைத் தொடர்ந்து திண்டுக்கல் (Dindigul) அதிமுக (AIADMK) அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது.
அதிமுக தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணியுமாக அக்கட்சி பிளவுபட்டுள்ளது.
முதல்வர் விஜய் அரசுக்கு எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியின் 22 அதிமுக எம்.எல்.ஏக்கள், விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி, அவரது அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரின் கட்சி பதவிகளை பறித்துவிட்டு புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிமுக அலுவலகத்துக்குள் புதிய மா.செ.க்கள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து அதிமுக அலுவலகங்கள் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல திண்டுக்கல் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைய பாதுகாப்பு கோரி மாவட்ட எஸ்பியிடம் நத்தம் விஸ்வநாதன் தரப்பு அதிமுக (Natham Viswanathan Faction) மனு கொடுத்துள்ளது. இதற்கு புதிய மா.செ.வான திண்டுக்கல் சீனிவாசன் தரப்பு எதிர்ப்பு உள்ளது. இதனையடுத்து மோதலைத் தவிர்க்க திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கும் பூட்டு போடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
