“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற விசிக-வின் நீண்ட கால முழக்கத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழக அரசு தனது தோழமைக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது.
அந்தவகையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு இன்று சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து தலைமை செயலளகத்தில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சமூக நீதித் துறை அமைச்சர் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்று துறை சார்பான கீழ்க்கண்ட கோப்புகளுக்கு கையொப்பமிட்டார்.
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM ARISE Chief Minister’s Adi Dravidar and Tribal Socio Economic Development Scheme)ன் கீழ் 2026-27ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்திற்கு ரூ.75.00 கோடி நிதியினை விடுவிக்க ஒப்புதல் வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் 120 கிராம அறிவுசார் மையங்கள் அமைத்திட NABARD RIDF XXX திட்டத்தின் கீழ் ரூ.61.56 கோடி நிதி விடுவிப்பதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.
பிரதான் மந்திரி அனுசுசித் ஜாத்தி அபியுதய திட்டம் (PM-AJAY) என்ற திட்டத்தின் கீழ் 12 மாணவியர் விடுதிகள் கட்டுவதற்காக ரூ.7.99 கோடி நிதியை விடுவிக்க ஒப்புதல் வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே ரூ.144.55 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டுள்ளார் வன்னி அரசு.
