அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என அமைச்சர் சரத்குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் இன்று (22.05.2026 )தலைமைச் செயலகத்தில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், துறையைப் பற்றியும். துறையின் தலைமையகங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் சரத்குமார், “அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பயிற்சி மையங்கள் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.
அரசு அலுவலகங்களில் ஊழலற்ற மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
