சேலம் அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரும், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் முன்னாள் மாணவர்கள் அணி சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் பங்கேற்று உற்சாகமாகக் கயிறை இழுத்தார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இரு அணிகளும் கயிறை பலமாக இழுத்ததில் எதிர்பாராதவிதமாக கயிறு நடுவில் அறுந்தது.
இதனால் நிலைகுலைந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் கயிறு இழுத்துக் கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.
அமைச்சர் கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரைப் பத்திரமாகத் தூக்கி விட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் பெரும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் பள்ளி விளையாட்டு விழா மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
