மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையான சொல் பயன்படுத்தியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதற்கு அமைச்சர் கீர்த்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதற்கட்டமாக 9 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிவகாசி எம்.எல்.ஏ கீர்த்தனா.
இவர் கடந்த 11ஆம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றது குறித்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் பற்றி அவர் பயன்படுத்திய சொல் கண்டனத்திற்கு உள்ளானது.
இதற்கு எதிர்க்கட்சியான திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை.
மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான்; அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது. அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
