விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக சார்பில் வெற்றி பெற்றவர் ஜெகதீஸ்வரி. முதல்லர் விஜய் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார் ஜெகதீஸ்வரி.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னை வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் பாதுகாப்பு வாகனமும், பின்னால் அவரது சொந்த காரும் வந்துள்ளது. இதில் மூன்றாவதாக வந்த அவரது சொந்த கார் சென்னை காட்டாங்குளத்தூர் அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
சட்டப்பேரவை விடுமுறையின் காரணமாக சொந்த தொகுதிக்குச் சென்றிருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, விடுமுறை முடிந்து மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கத் திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துப் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அமைச்சரின் சொந்த வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அமைச்சரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டமன்றத்தில் இன்று முதல்வர் விஜய் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளிக்க உள்ள நிலையில் அமைச்சரின் கார்மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
