தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை எடுத்து வராததால், இன்று சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கவில்லை.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று 17-வது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, தமிழக முதல்வர் விஜய்க்கு பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, விஜயின் அமைச்சரவையில் நேற்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அந்த வரிசையில், சிவகாசி தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தனா அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஆனால் இன்று, அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை எடுத்து வர மறந்துவிட்டதால் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கவில்லை. சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு கீர்த்தனா எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
