அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவிலும் ஆளுநர் அர்லேகரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் அமமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான மன்னார்குடி காமராஜ், புதுச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தங்கி இருந்த நிலையில் திடீரென ‘தொடர்பு எல்லைக்கு’ அப்பால் இருப்பதாக அவரது செல்போன் அழைப்புகள் காட்டியது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன், அமமுக எம்.எல்.ஏ. மன்னார்குடி காமராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை நேரில் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக எம்.எல்.ஏ. காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை; அவரது பெயரில் போலி ஆதரவு கடிதத்தை தவெகவினர் ஆளுநர் அர்லேகரிடம் கொடுத்திருக்கலாம். போர்ஜரி கடிதத்தை விஜய் கொடுத்துள்ளார். இதனால் விஜய்யின் ஆதரவு கடிதங்கள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென நள்ளிரவில் ஆளுநர் மாளிகைக்கு டிடிவி தினகரன் சென்று ஆளுநர் அர்லேகரை சந்தித்தார்.
டிடிவி தினகரனால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்த அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் ஆளுநர் மாளிகைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
