தமிழக அரசியலில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, டி.டி.வி. தினகரன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார்.
அந்த கடிதத்தில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய நான், தமிழகத்தில் புதிய அரசை அமைப்பதற்கான எடப்பாடி பழனிசாமியின் உரிமை கோரலுக்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னார்குடி தொகுதியில் (167) போட்டியிட்ட எங்கள் கட்சி வேட்பாளர் எஸ். காமராஜ் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மன்னார்குடி தொகுதி (167) சட்டமன்ற உறுப்பினர் காமராஜும் மேற்கண்ட உரிமை கோரலை ஆதரித்து இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
எனவே, எடப்பாடி கே. பழனிசாமியை புதிய அரசை அமைக்க அழைக்குமாறும், தமிழக முதல்வராகப் பதவியேற்கச் செய்யுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை கொடுத்த பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இன்னைக்கு பழனிசாமிக்கு ஆதரவாக, அவர் கவர்மெண்ட் அமைக்கணும் அப்படிங்கறதுக்காக, எங்க எம்.எல்.ஏ மன்னார்குடி காமராஜ்க்கு நான் லெட்டர் டைப் பண்ணி அனுப்பி, அவர்கிட்டயும் கையெழுத்து வாங்கி, என் கையெழுத்தையும் போட்டு, மாலை சுமார் 6:30 – 6:45-க்கு இதை கையெழுத்துப் போட்டு பாண்டிச்சேரில இருந்து செகரட்டரிகிட்ட கொடுத்து அனுப்புறேன் .
இது இங்க ரீச் ஆகுறதுக்குள்ள, டிவி சேனல்ஸ்ல ‘போர்ஜரி’ நடந்துருக்குன்னு நியூஸ் வருது. நான் இம்மீடியட்டா கவர்னர்கிட்ட அப்பாயின்மென்ட் கேட்டு வந்து இந்த ஒரிஜினல் லெட்டரையும், காப்பியையும் கொடுத்தேன்.”
இது குதிரை பேரமாக இருக்கணும். எங்க எம்.எல்.ஏ-க்கு போன் போட்டா எடுக்க மாட்டேங்குறாரு.
அவர் போன் ரீச்சபிலா இல்லை. போனை யாராவது பிடுங்கி வச்சிருக்காங்களான்னு தெரியல.
இந்த லெட்டர் விஷயத்தை கவர்னர்கிட்ட சொல்லிருக்கேன். இதை சீரியஸா இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு சொல்லிருக்கேன்.
தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இப்படி நடந்ததா கேள்விப்பட்டது இல்லை. ஒரு கட்சிக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் இருந்து மக்கள் ஆதரவு கொடுத்திருக்காங்க. ஆனா ஆட்சி அமைக்கிறதுக்கு அவங்களுக்கு ஆதரவு கிடைக்கல.
மன்னார்குடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தான் ஓட்டு போட்டிருக்காங்க. திமுகவையும், தவெகையும் எதிர்த்துதான் மன்னார்குடி மக்கள் ஓட்டு போட்டியிருக்கிறார்கள்.
இப்படியிருக்கையில், ‘தூய அரசு’ அமைப்போம்னு சொல்லிட்டு முதல் நாளே இப்படி ஒரு குதிரை பேரத்துல ஈடுபடுறது சரியா?
தவெகதான் இதை செய்திருக்கிறது.
இது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல். இதை கவர்னர் விசாரிப்பார்னு நம்புறேன்” என்று கூறினார்.
