சேலத்தில் (Salem) 50 பெண்களுக்கு பணம் தந்து உதவுவது போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் ஆபாச வீடியோக்கள் எடுத்தும் மிரட்டல் விடுத்து வந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், பல இளம் பெண்களை மிரட்டி, அவர்களைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தியதாகக் கடுமையான புகார்கள் எழுந்தன.
பொள்ளாச்சியில் பல பெண்கள் பாதிக்கப்பட்டது போல சேலத்திலும் மணிகண்டனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக பெண் ஒருவரது ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சேலம் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தவெகவுக்கு (TVK) தொடர்பு இல்லை
இதனிடையே கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தவெக சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதில், “சேலம் தெற்கு மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, புத்தூர் ஊராட்சி சேர்ந்த M. மணிகண்டன் S/o முருகேசன் சின்னபுத்தூர் மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் இவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார் என்கிற செய்தி சமூக வலைதளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது. M. மணிகண்டன் என்ற நபருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
