நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் விஜய் பெயரை சொல்லாமல் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், “டெல்லி, மும்பை, கல்கத்தா என்று எத்தனையோ மாநகராட்சிகள் உள்ளன. ஆனால் மாநகராட்சி சார்பாக எங்கும் பாலம் கட்டியதாக வரலாறு கிடையாது. நான் மேயராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் ஏறக்குறைய 10 மேம்பாலங்களைக் கட்டிய பெருமை எனக்கு உண்டு. எனக்கு என்றால் உங்களுக்குத்தான். உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான். நான் கட்டிய பாலங்கள் காரணத்தால்தான் இன்று ஓரளவுக்கு போக்குவரத்து சீராக உள்ளது.
ஆனால் இன்னும் போக்குவரத்துச் சிக்கல்கள் தொடர்கிறது. அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியில் நான் முதலமைச்சராக வந்த பிறகு, இப்போது மாநகராட்சி சார்பாக ஏறக்குறைய 19 மேம்பாலங்கள் கட்டியிருக்கிறோம். சிறிய பாலங்களையும் கட்டியிருக்கிறோம். பல பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறோம். இதையெல்லாம் செய்துள்ள உரிமையோடு வந்துள்ளேன்.தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நேற்றுதான் சென்னைக்கு வந்தேன். வந்தவுடன் தென்சென்னை பகுதிக்குச் சென்றேன்.
இப்போது வடசென்னை பகுதிக்கு உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். அதிகமாக உங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புவது: உங்களோடு இருந்து, உங்கள் வீட்டு ஊழியனாக, தொண்டனாகப் பணியாற்றும், உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றுகின்ற ஒருவர் வேண்டுமா? அல்லது எங்கோ இருந்து புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடித்துக் கொண்டிருக்கும் அவர் வேண்டுமா? என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவ்வளவுதான் நான் உங்களைக் கேட்கும் ஒரே கேள்வி.நான் யாரையும் அரசியலில் தாக்கிப் பேச விரும்பவில்லை. விமர்சித்தும் பேச விரும்பவில்லை. அது எனது பழக்கமும் இல்லை. யாரையும் எதிர்த்து மரியாதை இல்லாமல் தரக்குறைவாகப் பேசும் பழக்கம் எனக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
