கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி கேரள மாநிலம் கசர்கோட் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஞ்சுஸ்ரீ பார்வதி என்ற பெண் ரோமான்சியான் என்ற ஓட்டலில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று (ஜனவரி 7) காலை அஞ்சுஸ்ரீ பார்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பார்வதியின் பெற்றோர் மேல்பரம்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
பத்தனம்திட்டாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பார்வதி இறந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பார்வதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் மருத்துவ அதிகாரிகள் விசாரித்து வருகிறார். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவில் விஷம் கலந்ததாக குற்றம் சாட்டப்படும் ஓட்டல்களில் உரிமம் ரத்து செய்யப்படும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த வாரம் கோட்டயத்தில் செவிலியராக பணியாற்றி வந்த ரேஷ்மி என்ற பெண் பிரியாணி சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், பார்வதி என்ற மற்றொரு பெண்ணும் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செல்வம்
Comments are closed.