நடிகர் விமலுக்கு சிறை தண்டனை விதித்து சிறு வழக்குகளை விசாரிக்கும் சென்னை 11ஆவது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா படத்தில் நடிகர் விமல் நடித்திருந்தார். இந்த படம் பணப் பிரச்சனையில் சிக்கியது.
எனவே இந்த படத்தை தயாரிக்க விமல் பைனான்சியர் கோபியிடம் இருந்து 4.5 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
பின்னர் இந்தத் தொகைக்கான காசோலையை விமல் வழங்கியுள்ளார்.
இந்த காசோலையை வங்கியில் கோபி செலுத்தியபோது , கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.
இதனால் விமல் 4.5 கோடி ரூபாய் செக் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று (ஜூலை 23) உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆர்த்தி, ”நடிகர் விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. விமல் வாங்கிய கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இன்று தீர்ப்பு வெளியான நிலையில் நடிகர் விமல் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
அப்போது அவர் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
