நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிவரும் நிலையில், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் சூர்யா, இதுவரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ச்சியாகப் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வரும் சூர்யா, ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவரது ரசிகர் மன்றம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
