அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் வகையில், ஈரானியப் படைகள் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களையும், இதர இலக்குகளையும் குறிவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. இத்தாக்குதல்களில் குவைத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் இந்தத் திடீர் தாக்குதல்களில் குவைத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம், குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அப்துல்லா முபாரக் பகுதியிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளம் ஆகியவை ஈரானின் தாக்குதல் இலக்குகளாக மாறியுள்ளன.
பஈரானின் வான்வழித் தாக்குதலின் போது, குவைத் விமானப் பாதுகாப்புப் படைகள் தவறுதலாக மூன்று அமெரிக்க F-15E போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான தமிழர்களின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, நிலைமையை தீவிரமாகக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் அவர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனிடையே கடுமையான போருக்கு மத்தியில் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள், தாயகம் திரும்ப தொடங்கி உள்ளனர்.
