”இந்தியா கூட்டணி”க்குள் (INDIA alliance) திமுகவை (DMK) மீண்டும் கொண்டுவர வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
டெல்லியில் 23 கட்சிகள் பங்கேற்ற “இந்தியா கூட்டணியின்” ஆலோசனைக் கூட்டம் இன்று ஜூன் 8-ந் தேதி நடைபெற்றது.
அகிலேஷ் யாதவ் பேசியது என்ன?
இந்தக் கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், “மாநிலக் கட்சிகள் எங்கு வலுவாக இருக்கிறன்றனவோ, அங்கு காங்கிரஸ் அவற்றுடன் போட்டியிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே இருந்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் அதை கடைபிடிக்கவில்லை. திமுகவை இந்தியா கூட்டணிக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும்.
பாஜக தலைமையிலான அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற முக்கியப் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிக் கூட்டணி ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.” என்றார்.
தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்
தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “பீகாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பாஜகவுக்குத் தாவியதால் இந்தியா கூட்டணி ஒரு ராஜ்யசபா எம்பி இடத்தை இழந்துவிட்டது. கூட்டணிக்குள்ளான உள்சண்டைகளும் காங்கிரஸின் போக்குமே தேர்தல் பின்னடைவுகளுக்குக் காரணம். பீகாரில் 14 தொகுதிகளை இதனாலேயே இழக்க நேரிட்டது.
ஐக்கிய ஜனதா தளத்தை கூட்டணியில் தக்க வைத்திருக்க வேண்டும். திமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்றார்.
திமுகவுக்கு (DMK) சுப்ரியா சுலே ஆதரவு
தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேசுகையில், “ திமுகவை மீண்டும் இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.
2 அமைச்சர் பதவிக்காக திமுகவை கழற்றிவிடுவதா?
சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஜான் பிரிட்டாஸ் பேசுகையில், ”நேஷனல் ஹெரால்டு வழக்கில் நாங்கள் உங்களை ஆதரித்தோம். ஆனால், நீங்களோ எங்கள் தலைவர் பினராயி விஜயனை கைது செய்ய வேண்டும் என்று விரும்பினீர்கள்.
2 அமைச்சர் பதவிகளுக்காக உங்கள் முக்கிய கூட்டணி கட்சியான திமுகவைக் கைவிட்டுவிட்டீர்களே..” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜாவும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.
