ஐந்தே நிமிடத்தில் மாயமான காய்ச்சல் : மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடந்த அதிசயம்… இளையராஜா உருக்கம்!

Published On:

| By christopher

ilaiyaraaja share his devotion on moogambikai amman

தமிழ் திரையுலகில் 1976ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் தவிர்க்க முடியாத இசை ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். ilaiyaraaja share his devotion on moogambikai amman

சமீபத்தில் லண்டனில் தனது முதல் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து ஒட்டுமொத்த தேசத்தையும் கவனிக்கச் செய்தார். அவருக்கு பிரதமர் மோடி முதல் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் இன்றளவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுடன் நடந்த உரையாடலில் இசை, ஆன்மீகம், குடும்பம் என பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார் இளையராஜா.

அப்போது அவரது முதல் ஆன்மீக தேடல் குறித்தும், மூகாம்பிகை அம்மன் மீதான தனது பக்தி குறித்தும் உருக்கமாக இளையராஜா பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, “எனது குருக்களில் ஒருவரான ஜிகே வெங்கடேஷின் கச்சேரி 1974ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்றது. மொத்தம் 75 இசைக் கலைஞர்கள் வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போது நானும் எல்.வைத்தியநாதனும் (இசையமைப்பாளர்) ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக பணியாற்றினோம். வைத்தியநாதன், “ராஜா, எல்லாமே நீங்க பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார். அதற்குப் பின்னர் அந்த நிகழ்ச்சிக்கான அனைத்துப் பணிகளையும் நானே ஒருவனாக நின்று பார்த்தேன். கச்சேரியும் நல்லபடியாக முடிந்தது.

ஆனால் அதன் பின்னர் எனக்கு மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இந்த கச்சேரிக்கு முன்பு நான் வைத்தியநாதனிடம், “மைசூர் வரை வந்து விட்டோம். மந்திராலயா கோயிலுக்கு போயிட்டு வரலாமா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், “நான் மூகாம்பிகை கோவிலுக்கு போவதாக உள்ளேன். அடுத்த முறை வேண்டுமானால் மந்த்ராலயா செல்லலாம்” என்று கூறினார். அதற்கு நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

எங்கள் அனைவருக்கும் மைசூர் ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருந்தாங்க. அந்த ஓட்டலில் ரூம் வரிசையாக இருக்கும். எனக்கும் வைத்தியநாதனுக்கும் ஒரே ரூம். அங்கு ஜன்னல் கிடையாது. 2 கட்டில் மட்டும் இருக்கும். உள்ளே போன் கிடையாது. நமக்கு எது தேவை என்றாலும், ஆர்டர் செய்ய முடியாது.

கச்சேரி முடிந்த பிறகு ரூமுக்கு வந்து தங்கி இருந்தோம். சாயந்திரம் மைசூரில் இருந்து பெங்களூருக்கு ட்ரெய்னில் சென்று, அங்கிருந்து பிருந்தாவன் மூலம் சென்னைக்கு திரும்ப வேண்டும். இதுதான் பிளான் ஆக இருந்தது. இந்த நேரத்தில் ஆர்கெஸ்ட்ராவில் உள்ளவர்கள், மைசூரை சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பி விட்டார்கள். அந்த நேரத்தில், உள்ளே நான் இருந்தது தெரியாமல், வைத்தியநாதன் ரூமை பூட்டி, சாவியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.


நைட் கச்சேரி முடிந்ததிலிருந்து எனக்கு பயங்கரமான காய்ச்சல். அந்த நாள் வரையில் அது மாதிரியான காய்ச்சலை நான் எதிர் கொண்டது கிடையாது. அந்த நேரத்தில் “அவ்வளவுதான் விதி முடிய போகுது” என்று என் அம்மா, மனைவி, குழந்தைகளை நினைத்துக் கொண்டேன்.

மதியம் 3 மணிக்கு வெளியே சென்றவர்கள் மாலை தான் திரும்பி வந்தார்கள். அப்போது ரூமை திறந்த வைத்தியநாதன், “ராஜா சாரி, சாரி. நான் தெரியாம பூட்டி விட்டு சென்று விட்டேன்” என்றார். அவர் என்னைப் பார்த்து விட்டு, “என்ன ராஜா இவ்வளவு சீரியஸா இருக்கு?” என்றார். ஒரு டேப்லெட், தண்ணீர் ஆர்டர் பண்ணக் கூட போன் வசதி கிடையாது. அப்படியான சூழலில் ஒரு முழு நாளும் சென்றது.

அப்போது வைத்தியநாதன் என்னிடம், “நீங்கள் மூகாம்பிகை கோவிலுக்கு வருகிறேன் என்றீர்களே! இப்போது காய்ச்சல் இப்படி அடிக்கிறது. மூகாம்பிகை வருகிறீர்களா? அல்லது அப்படியே சென்னைக்கு போகிறீர்களா?” என்று கேட்டார்.

நான் என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது சட்டென, உடனடியாக எனக்குத் தோன்றியது, ’செத்தாலும் மூகாம்பிகையிடம் போய் சாகலாம் என்று முடிவெடுத்து, ’போகலாம்’ என்றேன். ஏனென்றால், அந்த அளவுக்கு எனக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது.

மூகாம்பிகை கோயிலுக்கு போகலாம் என்று சொன்ன பிறகு எனக்கு ஐந்து நிமிடத்தில் குற்றால அருவியில் குளித்து விட்டு வெளியே வந்தால் எவ்வளவு ஃபிரஷ்னஸ் இருக்குமோ, அதே போன்ற உணர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நான் டீ, காபி, டேப்லெட், தண்ணீர் என எதையும் அருந்தவில்லை.

மூகாம்பிகை கோவிலில் கால் எடுத்து, முதல் அடி வைத்த போது நெஞ்சுக்குள் ஒரே படபடப்பு. “கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு” என்றெல்லாம் என்னுடைய அண்ணனின் கச்சேரியில் பாடி உள்ளேன். கடவுள் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எதற்காக எனது இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது என்று யோசிக்கிறேன்.

அந்தக் கோவிலை மூன்று முறை பிரதட்சணம் செய்யும்போது, மூகாம்பிகை அம்மன் என்னில் முழுவதுமாக நிறைந்து விட்டார். அப்போது வைத்தியநாதன் வயலின் கொண்டு வந்திருந்தார். அதை அம்பாளின் கையில் கொடுத்து அலங்காரம் பண்ணி, இன்னொரு வயலினை வைத்து வாசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்பாக நான் பெரிய அளவில் எதையும் பிரார்த்தனையில் கேட்டது கிடையாது.

ஒரே ஒரு பிரார்த்தனை தான் அப்போது இருந்தது. “மீண்டும் உன்னைப் பார்க்க வருவதாக இருந்தால், 2 கீர்த்தனைகள் பாடுவதற்கு அருள் செய்” என்று மட்டும் மூகாம்பிகை அம்மனிடம் வேண்டினேன். வைத்தியநாதன் சரஸ்வதி மண்டபத்தில் வைத்து வயலின் வாசிக்க ஆரம்பித்தார். அதே நேரத்தில் ஊர்வலமாக அம்மனை கொண்டு வருவதற்கு கோவிலில் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரஸ்வதியை வெளியே கொண்டு வந்து, பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்ல தயாரானார்கள்.

அப்போதுதான் சோனி நிறுவனம் புதிய டேப் ரெக்கார்டரை வெளியிட்டு இருந்தது. டேப் ரெக்கார்ட் மற்றும் ரேடியோ என 2 வேலை செய்யும். அதில் வைத்தியநாதன் தான் வயலின் இசைப்பதை ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தார். அம்மன் ஊர்வலம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இவரும் வயலின் வாசிக்கிறார். இது அனைத்தும் டேப் ரெக்கார்டில் பதிவாகிக் கொண்டிருந்தது. பின்னர் சரஸ்வதியை மண்டபத்தில் கொண்டு வந்து வைத்தனர். அதன் பிறகு வைத்தியநாதன் வாசிப்பதை நிறுத்திவிட்டார். அப்போது சரஸ்வதிக்கான சடங்குகள் நடந்தன.

திடீரென்று என்னை கையைக் காட்டிய வைத்தியநாதன், “பாடுங்க” என்று சொன்னார். அந்த கீர்த்தனை மொழி கன்னடமும் மலையாளம் கலந்த ஒரு மொழி. இதனால் ஷாக் ஆகிப்போன நான்… எனக்குத் தெரிந்த அம்பாள் கீர்த்தனையை பாடினேன். மறுபடியும் சரஸ்வதிக்கு மந்திரங்களைச் சொன்னார்கள். அதற்குப் பிறகு, “மறுபடி பாடுங்கள்” என்று என்னிடம் கேட்க… ஒரு கீர்த்தனை தானே தெரியும். என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்து, ஓரளவு தெரிந்த இன்னொரு கீர்த்தனையை பாடினேன்.

நான் பாடி முடித்ததும் வைத்தியநாதன் என்னிடம், “ராஜா, நீங்க பாஸ் ஆகிட்டீங்க” என்றார். அப்படின்னா? எப்படி? என்று நான் கேட்க, “நீங்கள் ரூமுக்கு வாங்க. நான் சொல்றேன்” ன்னு சொன்னார். ரூமுக்குப் போனால், அவர் டேப் ரிக்கார்டரை போட்டு காண்பித்தார். நான் பாடி முடித்ததும் அந்த டேப் முடிந்து விடுகிறது. அதுவரைக்கும் அந்த டேப் ரெக்கார்ட் செய்து கொண்டு இருந்திருக்கிறது.

அவர் என்னிடம், “இதைப் பார்த்தீர்களா ராஜா? நான் வயலின் வாசிக்கும் போது மண்டபத்தில் அம்மா இல்லை. ஊர்வலமாக கொண்டு வந்து, பின்னர் மணிமண்டபத்தில் வைத்தார்கள். அதன் பிறகு குருக்களை மந்திரம் சொல்லச் சொல்லி, உங்களை அவள் பாட வைத்து கேட்டு விட்டாள். மறுபடியும் இன்னொரு கீர்த்தனை பாடச் சொல்லி அம்மன் கேட்டு விட்டாள். இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் பாஸ் ஆகிட்டீங்க” என்றார்.

இந்த சம்பவம் எனது ஆன்மிக தேடலில் திருப்பத்தை கொடுத்தது. அன்றிலிருந்து இன்று வரை எனக்கு அம்மனுடைய அருள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. “எனக்கு கவலை எல்லாம் பாட்டில் தான் இருக்குமே தவிர, உள்ளுக்குள் இருக்காது. மூகாம்பிகை அம்மனிடம் நான் உரிமையோடு எதையும் கேட்கிறேன்” என்று இளையராஜா பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share