இட்லிகடை டூ இஸ்ரோ: சந்திரயான் 3 குழுவில் சாதனை இளைஞர்!

Published On:

| By christopher

நிலவை எட்டிபிடித்துள்ள இஸ்ரோவின் சந்திரயான் 3 குழுவில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் வெற்றிக்கான போராட்டம் பலரையும் ஈர்த்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக தரையிறக்கி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து உலகமே இஸ்ரோவையும், அதில் பணியாற்றிய ஒவ்வொரு விஞ்ஞானியையும் பாராட்டி வருகிறது.

சந்திரயான் 3 திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர முத்துவேல், முன்னாள் இஸ்ரோ இயக்குநர் சிவன், விஞ்ஞானிகள் தாமோதரன், கார்த்திக் ஆகியோரும் பலதரப்பிலான பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

Scientist Veera Muthuvel: The Tamil 'Mastermind' Behind Chandrayaan-3 - City Times

அதே போன்று சட்டீஸ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரத் குமார் என்ற இளைஞரும் சந்திரயான் 3 திட்டத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். அவரின் கல்விக்கு தடைபோட்ட வறுமையை தாண்டி, அவர் திறமையால் சாதித்துள்ளார்.

இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களுள் ஒன்று சட்டீஸ்கர். அந்த மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள சாரெளடா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த தம்பதியர் கே.சந்திரமௌலீஷ்வர்-  வனஜா. இவர்களுக்கு பாரத் குமார் மற்றும் லாவண்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

பெற்றோர் இருவரும் ஹோட்டல் நடத்தி வந்தனர். பின்னர் வருமானம் இல்லாததால், சந்திரமௌலீஷ்வர் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிக்கு சென்றார். இதனையடுத்து பள்ளி செல்வதற்கு முன்பும், பின்பும் தாயாருக்கு உதவியாக பாரத்குமாரும் ஹோட்டலில் வேலைபார்த்துள்ளார்.  பலநேரங்களில் வியாபாரம் முடிந்தாலும் பாத்திரம் கழுவிய பிறகே படிக்க முடியும் என்ற சூழ்நிலை.

பாரத் குமார் சாரெளடாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்தார். அவரது 9 ஆம் வகுப்பில், அவரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

எனினும் நன்றாக படித்த பாரத்குமாரின் குடும்ப நிலையையும், அவரது திறமையையும் அறிந்து கொண்ட பள்ளி நிர்வாகம், தானாகவே முன்வந்து கல்வி செலவினை  ஏற்றுக்கொண்டது. இதனை பயன்படுத்தி சிறப்பாக படித்த அவர், பிளஸ் 2 தேர்வில் இயற்பியலில் 99, வேதியியலில் 98 மற்றும் கணிதத்தில் 99 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

இதனையடுத்து உயர்கல்விக்காக தன்பாத் ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் மீண்டும் வறுமை வாட்ட, படிப்பை கைவிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பாரத்குமாரின் உயர்கல்வி தடைபடுவது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை கேள்விப்பட்ட ராய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ராம்தாஸ் ஜோக்லேகர், அருண் பாக் மற்றும் ராய்கரைச் சேர்ந்த சாந்த் ராம் ஆகியோர் பாரத்குமாருக்கு உதவுவதற்காகதேவ தூதர்களாக சாரெளடாவுக்கு விரைந்தனர். அவரது உயர்கல்வி கல்வி செலவை தாங்களே முழுவதுமாக ஏற்பதாக உறுதியளித்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு கிடைத்த உதவியை, சிறிதும் வீணாக்காமல் தொடர்ந்து 7 செமஸ்டர் தேர்வில் முதலிடம் பிடித்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஐஐடி தன்பாத்தில் 98% மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் பெற்றார்.

அடுத்த ஆண்டில் தனது படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே கல்லூரி நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பாரத் குமார் இந்தியாவின் உயரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Testament to Team ISRO: guiding 'solitary journey through vastness of space' | Technology News - The Indian Express

 

இதன் மூலம் தன்னுடைய 23 வயதில் உலக நாடுகளே ஆவலுடன் உற்றுநோக்கி வந்த சந்திரயான் 3 திட்டத்தில் பணிபுரியும் உயரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதிலும் தனது குழுவினரோடு கடுமையாக உழைத்தார்.

தற்போது சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில், கல்வி, சமூக கட்டமைப்பில் பின்தங்கிய மாநிலமாக அறியப்படும் சட்டீஸ்கரின் ஹீரோவாக உயர்ந்துள்ளார் பாரத் குமார்.

பாரத் குமாரின் ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் அவரது வறுமை கீழே தள்ளினாலும், அவரது திறமை அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. சாதிக்க தூண்டியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

modi congrates isro for landing vikram lander

அன்று சிறுவயதில் ஹோட்டல் வேலைக்கு பிறகு தூங்காமல் கண் விழித்து படித்த பாரத் குமார், இன்று நாம் இரவில் காணும் சந்திரனை தொட்ட சந்திரயான் 3 குழுவில் இடம்பெற்று வரலாற்றில் தன்பெயரை பொறித்துள்ளார்.

குறுகிய கால சாதகமற்ற சூழ்நிலைகளால் அயர்வுற்று, எப்படியாவது வெற்றி பெற்று விட மாட்டோமா என்று ஏங்கி தவிக்கும் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் பாத்திரமாக உருவாகியுள்ளார் இந்த பாரத் குமார்.

கிறிஸ்டோபர் ஜெமா

“தங்கை கல்யாணத்துக்கு கூட வரல” : வீரமுத்துவேலின் தந்தை நெகிழ்ச்சி பேட்டி!

இஸ்லாமியர்கள் விடுதலை: ஆளுநர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share