மமதா பானர்ஜியின் (Mamata) திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மிக மோசமான பிளவை சந்தித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 60 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே மமதாவுக்கு எதிராக அணி திரண்ட நிலையில் தற்போது 20 எம்.பி.க்களும் பகிரங்கமாக பாஜகவை ஆதரிப்போம் என அறிவித்துள்ளனர்.
எம்.எல்.ஏ-க்கள் கலகம் – சபாநாயகர் அதிரடி அங்கீகாரம்:
மேற்கு வங்க தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. ஆனால் 60 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாங்களே உண்மையான கட்சி என மமதாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். இவர்களை உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாக மேற்கு வங்க சபாநாயகர் அங்கீகரித்துள்ளார்.
டெல்லியில் சோனியாவுடன் மமதா.. அதிரவைத்த 20 எம்.பி-க்கள்

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மமதா பானர்ஜி பங்கேற்றார். இக்கூட்டத்தில் சோனியா காந்தியை ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினார் மமதா பானர்ஜி.
அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ககோலி கோஷ் தஸ்திதார் எம்.பி. தலைமையில் 20 எம்.பி.கள் மக்களவையில் தனி அணியாக செயல்பட போவதாகவும் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த தகவலை ககோலி கோஷ் உறுதி செய்துள்ளார். இதனால் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிதறிப் போய்விட்டது.
