அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று ஜூன் 29-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேற்று என்னை சந்தித்தார்கள். ஆதரவு கட்சிகளின் தலைவர்களோடும் முதல்வர் விஜய் பேசுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த சந்திப்புக்கு பிறகுதான் என்ன பேச இருக்கிறோம் என்று தெரியவரும்.
முதல் நாள் சந்திப்பிலேயே இடைத்தேர்தல் எதிலும் நான் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டேன். ஊடகங்கள் ஊகங்களாக செய்திகளைப் பரப்புகிறார்கள்.
தவெகவுக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் நாங்கள் தரவில்லை. நாங்கள் இந்த இலாகாவை மாற்றித் தாருங்கள் என்றும் கேட்கவில்லை, திருச்சி கிழக்கிலே போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை. இவையெல்லாம் ஊடகங்களாக பரப்புகிற, ஊடகங்களே பரப்புகிற ஊகங்களாக இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அப்படி எந்த ஒரு அழுத்தத்தையும் தவெகவுக்கு தரவில்லை.
தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு நல்கி இருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். அதிலே எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஊசலாட்டமும் இல்லை.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது, தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல. என்ன பின்னணியில் அவர்கள் இதை செய்கிறார்கள் என்பது தெரியாது. இது அதிமுகவினுடைய உட்கட்சி விவகாரமாகவும் கடந்து செல்ல முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல” என்றார்.
