நிவாரண மையங்களில் மட்டுமின்றி அம்மா உணவகங்களிலும் இன்றும் (அக்டோபர் 16) நாளையும் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே நேற்றும், இன்றும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி இரவு முதல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.
அதே போன்று முதலமைச்சர் ஸ்டாலினும் நேற்று கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் மழை பாதிப்பு மற்றும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கான உணவு – தங்குமிட வசதிகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா