முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடையும் தருவாயில், திமுக முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அசோக் சினோரா ஆகியோர் வாக்குச்சாவடி மையத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தவெக வேட்பாளர் அசோக் சினோரா மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோரைத் தாக்கியதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தினர் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி தேவையில்லாமல் ஆட்களைக் கூட்டியது, மாற்றுக்கட்சி வேட்பாளரைத் தாக்கியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
