திமுக- அதிமுக ஆதரவுடன் விசிக தலைவர் தொல். திருமாவளவனை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்ததை நமது மின்னம்பலம் முதன் முதலில் வெளியிட்டது.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை பலராலும் நம்பவே முடியாத நகர்வாக இது இருந்தது. ஆனால் அரசியல் களத்தில் நடந்த நிகழ்வுகளை நமது மின்னம்பலம் தொடர்ந்து பதிவு செய்தது.
தற்போது அதிமுகவின் எஸ்பி வேலுமணி அணியும், திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முயற்சித்தது தொடர்பாக பேசியுள்ளார். ஆனால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி, அப்படி எல்லாம் நடக்கவே இல்லை என்கிறார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடமே இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
செய்தியாளர்களின் கேள்வி: உங்களை முதல்வராக்குவதற்கான முயற்சிகள் நடந்தது, அதை முறியடித்தது காங்கிரஸ்தான் என்று நேற்றைக்கு ஒரு செய்திகள் பரவலாகப் பேசப்பட்டது. அதற்கான முன்னெடுப்புகள் நடந்ததா?
திருமாவளவன் பதில்: காங்கிரஸ் அதில் எந்த வகையில் தலையிட்டது என்று எனக்குத் தெரியாது. அதிமுக, திமுக மற்றும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் அந்த முயற்சியை மேற்கொண்டதாக எனக்கும் தகவல் கிடைத்தது. நாங்கள் இடதுசாரிகள் எடுக்கிற முடிவின் அடிப்படையை முன்வைத்து அங்கிருந்து உயர்நிலைக் குழுவில் விவாதித்து அதன் பின்னர்தான் முடிவெடுப்போம். எல்லோரும் அது தாமதமான முடிவு என்று விமர்சிக்கிறார்கள். ஒரு அரசியல் கட்சியை நடத்துகிற எங்களுக்குத்தான் தெரியும் எந்த அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பது என்பது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
