தொகுதி மறுவரையறை பிரச்சனையில் திமுக தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று ஆகஸ்ட் 9-ந் தேதி செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: காவிரி, மேகதாது அணை பிரச்சனை என்பது மிக முக்கியமான ஒன்றுதான்; அதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மேகதாது அணை சம்பந்தமான பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பல கட்சிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகின்றன.
மக்களவை தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த பாஜக முயற்சிக்கிறது. இதனால் தமிழ்நாட்டுக்குரிய பிரதிநிதித்துவ விகிதம் குறையும். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, 71-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தான் ஏற்கனவே நமக்கு 39 தொகுதி என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த நிலை தொடர வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானம் என்பது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இப்போது புதிய அரசு வந்திருக்கிறது; மீண்டும் அவர்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபடுகிற போது, அது சம்மந்தமாக தமிழ்நாட்டிலே ஒத்த கருத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு கூட்டப்பட்ட கூட்டமிது; அதிலே திராவிட முன்னேற்றக் கழகமும் கலந்து கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
திமுக-வின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே அந்த கட்சி தெளிவுபடுத்தி இருக்கிறது. திமுகவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில், தமிழகத்துக்குரிய பிரதிநிதித்துவ விகிதம் குறையக்கூடாது என அனைவரும் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முன் முயற்சியை எடுத்தது திமுக.
தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து திமுக மாறுபடுகிறது என்பதற்கான எந்தவிதமான அறிகுறியுமே கிடையாது. திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியும் எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறார்.
அதே நேரத்தில் காவிரிக்கான அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டாததாலேயே தொகுதி மறுவரையறைக்கான எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டக் கூடாது என சொல்ல முடியாது. அது அர்த்தம் இல்லாதது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.
