தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1,250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி. கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய அளவிலான பாசனத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாசனப் பரப்பில் 55 சதவிகிதம் நிலங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் கால்வாய் பாசன ஆதாரங்களை நம்பியுள்ளன. மீதமுள்ள 45 சதவிகிதம் நிலங்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பை பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.
வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர்.
விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.
விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களிடம் ரூ.1500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக் கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும்” ன வலியுறுத்தி உள்ளார்.
