தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று கூடியது.
இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 19) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதில் தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், ‘முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஆனால் நேற்றைய தினம் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. ஆளுநருடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளது’ என்றார்.
இதற்கு அமைச்சர் செங்கோட்டையன், தேசிய கீதம் இரண்டு முறை பாடுவதில் எந்த தவறும் இல்லை அது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ’ஆளுநராக இருந்தாலும் சரி டெல்லி தலைமையாக இருந்தாலும் சரி, நாங்கள் மாநிலக் கொள்கையில் உறுதியாக இருப்போம். ஆளுநர் புறக்கணித்த அதே இடத்தில் ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடப்பட்டது. நான்காண்டுகள் கழித்து அதை நடைமுறைப்படுத்தியது எங்கள் முதல்வர் ’ என்றார்.
இதற்கு முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான எ. வ.வேலு, ’முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக தேசிய கீதம் என்பது தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபு’ என்று தெரிவித்தார்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி விவாதங்கள் செய்து வந்த நிலையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ”ஒருமுறை… இருமுறை அல்ல எத்தனை முறை என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருமுறை பாடப்பட்டது.. இருமுறை பாடப்பட்டது என குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம். ஆளுநரிடம் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அனைத்து மாநில அரசு விரும்பும்” என்று தெரிவித்தார்
