இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும்பான்மை இல்லாதபோது முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி.
இந்தநிலையில் காங்கிரஸுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தற்போது தமிழகத்தில் யார் தலைமையில் இயங்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தசூழலில் தான் ஜூன் 8ஆம் தேதி இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (ஜூன் 4) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ” டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.
அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.
“இந்தியா” கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சித் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
