அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக ஒரு தனி வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் சிபிஐக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
” கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் திமுக இந்த மனுவை வாபஸ் பெற்றது.
இதனால் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சட்டப்படி கிடைக்கக்கூடிய வேறு வழிகளை பெறுவதற்கு அனுமதி வழங்கியது.
இந்த சூழலில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, கரூர் துயர வழக்கை விசாரித்து வரும் சிபிஐக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த ஜூலை 2ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது வழக்கின் சாட்சிகளை கலைக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வை குழு கண்காணிப்பில் நடந்து வரும் சிபிஐ விசாரணையில் தலையிடும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே இது குறித்து தனி வழக்கு பதிவு செய்து அதன் விவரத்தை மேற்பார்வை குழுவிடம் தெரிவிக்க வேண்டும்
முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் பணி நியமன ஆணைகள் மற்றும் நிவாரணங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே முதல்வரின் இந்த கரூர் வருகையை சிபிஐ மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சிபிஐயின் கருத்தைப் பெற்ற பின்னர் மேற்பார்வை குழு அவசியம் என கருதும் பாதுகாப்பு நிபந்தனைகளின் கீழ் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.
மேற்கண்ட தொடர்புகள் நடைபெறுவதற்கு முன், வழக்கின் முக்கிய சாட்சிகளின் நிலையை சிபிஐ உரிய முறையிலும் வெளிப்படையான முறையிலும் பதிவு செய்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
