“திரைக்கதை மன்னன்” பாக்யராஜ் உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை

Published On:

| By Pandeeswari Gurusamy

K.bhagyaraj

திரைக்கதை மன்னனும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் (73) அவர்கள் நேற்று (ஜூன் 27, 2026, சனிக்கிழமை) மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் பாக்யராஜ்.

ADVERTISEMENT

நேற்று அதிகாலை எழுந்து வழக்கம் போல் நடைபயிற்சி முடித்து அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது வந்த செல்போன் அழைப்பை ஏற்றுப் பேசிக்கொண்டிருந்த பாக்யராஜுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிச் சரிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அருகேயுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே பாக்யராஜின் உயிர் பிரிந்தது. அவரது இந்தத் திடீர் மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

தலைவர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி:

மறைந்த பாக்யராஜ் அவர்களின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜயகுமார், சத்யராஜ், கவுண்டமணி, சரத்குமார், மோகன், பார்த்திபன், சமுத்திரக்கனி, கே.ஆர்.விஜயா, ராதிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

காவல் துறை மரியாதை:

திரையுலகிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக, அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டார். பொதுமக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதையடுத்து மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர் அவரது உடலுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share