நடிகைகள் குறித்து தவறாக பேசியதற்காக டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ரோகிணி புகார் அளித்த நிலையில், அவர் மீது 5 பிரிவுகளில் இன்று (செப்டம்பர் 16) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் அதிர்வை ஏற்படுத்திய ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து, நடிகை ராதிகா, கஸ்தூரி உள்ளி்ட்ட தமிழ் நடிகைகள் தாங்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதுதொடர்பாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் டாக்டர் காந்தராஜ், நடிகைகள் குறித்து அவதூறான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக சினிமாவில் விபச்சாரம் என்பது துணைத் தொழில் என்றும், ஒட்டுமொத்த நடிகைகளும் பாலியல் தொழிலாளிகள் என்பது போல் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோகிணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில், ”டாக்டர் காந்தராஜ் ஒட்டுமொத்த நடிகைகளையும் பாலியல் தொழிலாளிகள் என்பது போல் பேசுகிறார். சினிமா துறையை சேர்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
மறைந்த நடிகைகள் முதல் தற்போது உள்ள நடிகைகள் வரை அனைவர் பற்றியும், எவ்வித ஆதாரமும் இல்லாமல், பேட்டியில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் சினிமா என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது போல், டாக்டர் காந்தராஜ் பேசியுள்ளது வேதனை அளிப்பதாக இருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் அவருடைய பேட்டியையும் நீக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.