மழை பாதிப்பு: மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

Published On:

| By Monisha

deadline extended to pay electricity bills

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 96 சதவீதம் மின் விநியோகம் சீராக உள்ளது. இந்த சூழலில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி தேதி நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டத்திற்கு அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த டிசம்பர் அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து டிசம்பர் 4 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைப்படி, மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

2. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 04.12.2023 முதல் 06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

புயல் பாதிப்பு – சென்னையின் இன்றைய நிலைமை : தலைமை செயலாளர் பேட்டி!

படகு வருமா? கோபத்தின் கொந்தளிப்பில் வெள்ளச்சேரி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share